தன்னை அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானாகிய இறைவன் தீராத நோய் தீர்த்தருளும் பொருட்டு மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி, ஸ்ரீ வைத்தியநாதர் என்னும் திருப்பெயருடன் சிவலிங்கத் திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் தலம் திருப்புள்ளிருக்குவேளூர் என்பதாகும். இது சோழநாட்டில் நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுக்காவில் உள்ளது. காவிரியின் வடகரையிலுள்ள 63 தலங்களில் 16 வது தலமாக உள்ளது. தென்னிந்திய இருப்புப் பாதையில் (South Indian Railway) வைத்திஸ்வரன் கோயில் என்னும் பெயருடன் ஒரு புகைவண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தலயாத்திரை செய்வோர் தங்குவதற்கு வசதியாகப் பல சத்திரங்களும் மடங்களும் கட்டளை விடுதிகளும் இருக்கின்றன. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய உணவகம் (Restaurant), உறையுமிடம் கூடிய சதாபிஷேகம் ஓட்டல் (Hotel Sathabishegam), வைத்தீஸ்வரா ஓட்டல் (Hotel Vaithiswara) ஆகியன உள்ளன.